சென்னை: பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பின்புறம் கல்லுக்குட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் கிடப்பதை அறிந்த சிலர், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அண்ணா சதுக்கம் போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு சுடிதார் அணிந்த பெண் சடலம், தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. அநத அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இறந்து கிடந்த பெண் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது அவரை யாரும் கடத்தி வந்து, பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்தனரா, அவரது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களில் விவரங்களை பெற்றும் விசாரித்து வருகின்றனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.