டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 18 லட்சத்தை நெருங்குகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி உள்ளது. ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலியானார். உ.பி.யில் அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். தம்முடன் இருந்தவர்கள், சந்தித்து உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அமித் ஷா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.