கோழிக்கோடு

நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கோழிக்கோட்டில் செப்டம்பர் 24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் பாதிப்புக்குக்  கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை 6 பேருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1080 ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 327 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவார்கள். சுகாதாரத் துறையினர்  காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் இதில் அடங்கும்., வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.