டெல்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது ‘அதிர்ச்சியளிப்பதாக’ தெரிவித்துள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

திருவள்ளுர் அருகே சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக, ஏடிஜிபி ஜெயராம் மற்றும் புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பூவை ரூத்தி தாக்கல் செய்த முன்ஜாமின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏடிஜிபி ஜெயராமை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறையினர், அவரை சீருடையிலேயே கைது செய்தனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, , ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணை கோரி முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், , ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது, கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெனரல் எச்.எம். ஜெயராமைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும் நீதிமன்றம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி உஜ்ஜல் பூயான் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையில் அவர் சேர்ந்துள்ளதால், அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்வது அவசியமா என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உரிய விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன் என வழக்குரைஞர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், உரிய விளக்கம் கேட்டு நாளையே தினமே நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஏடிஜிபி ஜெயராம் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்த வழக்குரைஞர், உச்சநீதிமன்ற விடுமுறைகால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது அவர், “குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜரான உயர் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.