சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல் ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.   தவிர நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை, நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, விருதுநகர், சேலம் ஈரோட்டில் ஓரிரு இடங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.

வரும் மே 18ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  பிறகு மே 19-ல் குமரி, நெல்லை, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் மே 17ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் மே 17 வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.