HC questions claims of RSS outfit’s pre-natal workshop

 

ஆர்எஸ்எஸ்சின் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கான ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்திற்கு அறிவியல் பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

 

கிரகநிலைகளை கணித்து அதன்படி கணவனும், மனைவியும் சேர்ந்து நல்ல (சிவப்பாகவும், உயரமாகவும் உள்ள) குழந்தைகளைப் பெறுவதற்கான கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை நாடுமுழுவதும் பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ்-சின் ஆரோக்கிய பாரதி என்ற சுகாதாரப்பிரிவு இந்தப் பரப்புரைப் பணியை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ‘உத்தம் சந்ததி’ என்று அழைக்கப்படுவர் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறி வருகின்றனர். கொல்கத்தாவில் கடந்த சனிக்கிழமை இதற்கான பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றுக்கு ஆரர்எஸ்எஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தின் குழந்தைகள் உரிமைக்கான ஆணையத்தின் சட்ட ஆலோசகர் நஸீப்கான், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கர்ப்ப சன்ஸ்கார் திட்டம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், பழைய நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் குறித்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகளும், இதை நிரூபிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பினர்.

 

ஆனால் நீதிபதிகளின் இந்தக் கேள்விக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

கர்ப்ப சன்ஸ்கார் பற்றி முன்னர் சொன்ன கருத்துகளில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது பின்வாங்குவதாகவும், இது வெறும் அறிவுரை வழங்கப்படும் பயிற்சிக் கருத்தரங்கு மட்டும்தான் என அவர்கள் கூறுவதாகவும் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சட்டப்பிரதிநிதியான நஸீப்கான் நீதிபதிகளிடம் அப்போது தெரிவித்தார். குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக பேராசிரியரின் உரை மட்டுமே அந்த நிகழ்ச்சியில் இடம்பெற இருப்பதாக தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறுவதாகவும் கான் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

 

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் சார்பில் முறையான பதிலோ, விளக்கமோ இதுவரை அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.