நெட்டிசன்

டாக்டர் ஃபஜிலா ஆசாத்

வ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது அல்லது யாராவது வந்து நிற்கிறார்கள். என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, ஏன் எனக்கு மட்டும் மகிழ்ச்சி என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே இருக்கிறது?.

கலகலன்னு இருக்கிற கடை வீதியிலே ஒரு பத்து பேரை பார்த்து, ”உங்களுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க விருப்பமா, இல்லை சோகமா இருக்க விருப்பமா” ன்னு சும்மா கேட்டுப் பாருங்க.

நிச்சயமா, வாழ்க்கையிலே யாராவது சோகமா இருக்க விரும்புவாங்களா, சந்தோஷமாக இருக்கத் தான் விருப்பம்னு எல்லோரும் சொல்லுவார்கள். நீங்க உடனே, எப்பவும், எல்லோரும் சந்தோஷமா இருக்கிறீங்களான்னு கேட்டுப் பாருங்கள்… உடன் பாதிக்கு மேற்பட்டவர்களின் தலை கவிழ்ந்து விடும்.

நாம எல்லாருமே வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கனும்னு தான் ஆசைப்படுகிறோம். ஆனா, ஏன் நம்மாலே எப்பவும் அப்படி இருக்க முடியலை.. ஏன்னா, என் வாழ்க்கை, என் மகிழ்ச்சி என்னை மட்டும் சார்ந்தது இல்லைன்னு நாம பிடிவாதமா நம்புகிறோம். நாம் எவ்வளவு தான் சந்தோஷிக்க ஆசைப்பட்டாலும், நம் சுற்றம், நட்பு, சுற்றுச் சுழல், இப்படி பல விஷயங்கள், நாம் அறிந்தும் அறியாமலும் நம்மை அதது போக்கிலே இழுத்துட்டுப் போக அனுமதித்து விடுகிறோம்.

பணம், ஆரோக்யம், வேலை, புகழ், அந்தஸ்து, நிம்மதி இப்படி ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் மகிழ்ச்சியைத் தேடி, அலைந்து, ஒன்றல்ல இரண்டல்ல, “79” சதவீத மக்கள் மகிழ்ச்சியற்றுத் தவிக்கிறார்கள் என்கிறது ஆசியா கண்டத்தில் நடந்த ஆய்வு ஒன்று.

புரிந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது பலூன் இல்லை. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் உடைத்து விட்டுப் போகிறதற்கு. மகிழ்ச்சி என்பது நம்மோடு இயைந்து, நம்மை இயக்கிக் கொண்டு எப்போதும் நம் கூடவே இருக்க வேண்டிய நம் முச்சுக் காற்று.

நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்… ஏதாவது தர்ம சங்கடமான விஷயத்தைக் கேட்டாலோ, தர்ம சங்கடமாய் உணர்ந்தாலோ, நம்மையுமறியாமல், ஒரு பெரு மூச்சு விடுவோம். அல்லது நாம் முனைந்து அந்த பெரு மூச்சு விடும்போது இலகுவாக உணருவோம்.

இயற்கை நமக்கு மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் தான் வைத்திருக்கிறது. அதனால் தான் அது குறையும் போது, மூச்சுக்கு திணறுவதாய் நமக்குப் பெரு மூச்சு வருகிறது. நாம கொஞ்சம் தெளிவாக இருந்தால், நம் பார்வை கொஞ்சம் மாறினால், எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்க முடியும். இல்லையென்றால், எந்த சூழலாலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர இயலாது என்கிறது உளவியல்.

அது ஒரு பெரிய குடும்பம். மாமா, மாமி, அத்தை, சித்தி, சித்தப்பா, பிள்ளைகள், என குடும்பமே சேர்ந்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாமே என பல நாள் ப்ளான் பண்ணி அன்று பிக்னிக் போகிறார்கள்.

பூத்துக் குலுங்கும் மலர்களும், வண்டுகள் மொய்க்கும் பழங்களுமாய் அழகிய தோட்டம். பொங்கி வழியும் நீரில் குளித்து, சில்லென்ற தென்றலில் குளிர்ந்து, தேனருந்தி மகிழும் பட்டாம் பூச்சியாய் முழு நாளும் குதூகலமும், சந்தோஷமுமாக நகர்கிறது.

விதவிதமான உணவுகள், போட்டிகள், கிண்டல், கேலி, இளசுகளோட பார்வை பறிமாற்றம், என அற்புதமாய்க் கழியும் அந்த நாளோட இறுதியிலே, சிறு கல் தடுக்கி ஒரு குழந்தை விழ, அது வரை தேடிய மொத்த சந்தோஷமும் அது கூடவே விழுந்து விடுகிறது.

கலகல என்று இருந்த அந்த இடமே சலசலத்து, இறுக்கமாக மாற கனத்த உள்ளத்தோடு, ஒருத்தரை ஒருத்தர், நிகழ்வுக்கு காரணமாய் கை காட்ட, அந்த மொத்த குடும்பமும் தேடி வந்த மகிழ்ச்சியை, தொலைத்து விட்டு புதிய கவலையோடு திரும்புகிறது.

இது தான் மகிழ்ச்சி என தேடிப் போன மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைத்ததா? கிடைத்தால் ஏன் அவ்வளவு எளிதில் அதை தொலைத்து விட்டு மகிழ்ச்சியின்றி திரும்புகிறார்கள்?!!!.

மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் நிரப்புவதும், விரல்களை வருடிச் சென்றாலும் கைகளுக்குள் கிட்டாமல் விரலிடுக்கில் நழுவிச் செல்லும் மெல்லிய காற்றாய் விடுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.

பொதுவாக மகிழ்ச்சியை ஒரு மூச்சுக் காற்றாய், நம் மனசிலே நாம் தேக்கி வைக்கும் போது, ஒரு பற்றோடு வாழ்வோம். நாம் விரும்பியதை செய்வோம்.  அன்றி, மகிழ்ச்சியை ஏதாவது ஒன்றில் தேடும் போது, அதை நோக்கிய அந்த பயணத்திலேயே சோர்ந்து போய் விடுகிறோம். அல்லது அந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலே ஏதாவது ஒரு பிரச்னை வந்தாலும், அப்படியே உடைந்து போய் விடுகிறோம். முடிவில் நம்மையே நாம் இழந்தும் விடுகிறோம்.

அந்த சின்னஞ் சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்து வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்று கொடுத்து விட்டு, அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே வந்த பாம்பிடம் கேட்டது.

பாம்பும், “எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன், பதிலுக்கு நீ உன் அழகான சிறகில் ஒன்றைத் தருவாயா?” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

இப்படியே அந்தக் குருவி, அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ…. கனவில் கண்ட அந்த அழகான உலகம், அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்….. வந்தே விட்டோம்…… இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று திடீரென குருவி கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகளை ஏதோ ஒரு தேடலில், வழி நெடுகிலும் பிய்த்துக் கொடுத்து, எதை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அறியாமலே, ஒவ்வொன்றாக சிறுக சிறுக இழந்து, இப்போது பறக்க முடியாமல் முடமாகி போய் விட்டோம் என்ற உண்மை விளங்கியது.

இதோ, கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல், கீழே கிடக்கிறேனே என்று அந்தக் குருவி துடித்தது. அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும், அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பாமல் வெளியே தேடுவதால் ஏற்படும் விளைவைக் குறிக்கும் அற்புதக் கதை இது.

இது தான் சந்தோஷம் என்ற ஏதோ தேடலில் உண்மையில் நம்மிடம் இருக்கும் சந்தோஷங்களை  நம்மையுமறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறோம்…

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த இடங்களுக்குப் போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஏதோ ஒன்றின் தேடலில், ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் நாம் மகிழ்ச்சி என்று தேடிய ஒன்று கிடைக்கும்போது, நரை கூடி, திரை வந்து, உடலும் மனசும் தளர்ந்து, எல்லாம் இருந்தும், அனுபவிக்க முடியாத நிலைக்கு பெரும்பாலும் தள்ளப் படுகிறோம்.

இது இதை செய்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்காமல், நாம் இயல்பாய் மகிழ்ச்சியாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்வோம். நாம் நல்ல மன நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் எடுக்கும் முடிவுகளும், நல்ல விதமாக நம் எதிர் காலத்தையே மகிழ்ச்சியாக வைக்கக் கூடிய வகையில் அமையும்.

உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும்.

மகிழ்ந்து மகிழ்விப்போம்!!!

  • ஃபஜிலா ஆசாத் (Dr.Fajila Azad),

சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் – (International Life Coach – Mentor – Facilitator)