சென்னை: கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகர்ச்சியில்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கிண்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால், நீட் உள்பட தமிழகஅரசின் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருவதால், ஆளுநர் தேநீர் விருந்து மற்றும் சிலை திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்அறிவித்தன.

இதைத்தொடர்ந்து,. கிண்டி ஆளுநர் மாளிகையா ராஜ்பவனில் இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு விழா எளிமையாக நடைபெற்றது.  பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் உள்பட அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெறும் டீ பார்ட்டியிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என்று புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீநிவாசன், குஷ்பு, பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன், தாமாகா தரப்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.