சென்னை:

துரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார்.

கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை தமிழகஅரசு ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

மகளின் உயர்கல்வி செலவுக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக  நிவாரண உதவிகள் வழங்கி செலவழித்தார் மதுரையில் சலூன் கடை நடத்தி வந்த மோகன் என்பவர். இது குறித்து, பிரதமர் மோடி, தனது மான்கி பாத் வானொலி உரையில் குறிப்பிட்டு, பாராட்டு தெரிவித்திருந்தார்.  மேலும் ஐ.நா. சபையும் மாணவி நேத்ராவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியதுடன், ஐ.நாவில் பேசவும் அழைப்பு விடுத்துள்து.

இந்த நிலையில்,  ஏழை மாணவி நேத்ராவின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் வகையில் அவரது உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டு கோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.