சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன் கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளையும்  வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில், பாரம்பரிய விளையாட்டுக்களான தமிழக அரசு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு.  இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள மாநில அரசு, நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும்  அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை (Thermal Scanning) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.