புதுக்கோட்டை
இன்று புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோட்டை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கீழடி, ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை போன்ற அதே தன்மையுடைய கூரை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
தமிழக அரசின் தொல்லியல் துறை பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியைச் சமீபத்தில் தொடங்கியது. தொல்லியல் துறையினர், தொல்லியல் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அகழாய்வு பணியின்போது இன்று மூன்று முக்கிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு தங்க ஆபரணத்தை முதல் முறையாக இங்குக் கண்டறிந்துள்ளனர். அது ஆறு இதழ்களைக் கொண்ட மூக்குத்தி அல்லது தோடு வடிவில் உள்ளது.
தவிர எலும்பு முனை கருவி மற்றும் கார்னீலியன் பாசி மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது ஆகும். அந்த பகுதியில் தற்போது அகழாய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.