திருவண்ணாமலை: நாளை பவுர்ணமி வருவதையொட்டி, இந்த முறையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தமிழகஅரசு தடை விதித்துள்ளது பக்தர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பவுர்ணமி நாளன்று மலையை சுற்றி வந்தால், உடல்நலம் மட்டுமின்றி, குடும்பத்தினர் நோய் நொடிகளின்றி சுகவாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த முறை பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடைகள், 99 சதவிகிதம் அளவுக்கு விலக்கப்பட்டு, டாஸ்மாக் பார்கள் உள்பட அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு விட்ட நிலையில், திருவண்ணமலை கிரிவலம் செல்லும் பக்தர்களை தடுக்கும் வகையில் தமிழகஅரசு தொடர்ந்து தடை போட்டு வருகிறது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.