சென்னை: ‘கோட்சே சுடும்போது காந்தி குறுக்க வந்துட்டாரு..’ என ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஒருவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

டிஜிட்டல் உலகத்தில் தற்போதைய டிரெண்டிங் கிளப் ஹவுஸ் ஆப்.. ஏற்கனவே டிவிட்டர் சமூக வலைதளத்தில் ‘ஸ்பேசஸ்’ என்ற குழு உரையாடல் வசதி இருந்ததுபோல, ‘கிளப் ஹவுஸ்’ என்ற அரட்டை செயலிலும்மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலி மூலம் உரையாடிக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. இதனால், கிளப்ஹவுஸ் செயலி, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் டிரெண்டிங்காகி வருகிறது.

இந்த செயலியில்,  லைக்குகள், ஃபாலோயர்கள், கமெண்ட்களுக்குப் பதிலாகக் குரல்வழி உரையாடலின் மூலமாகப் பயனாளர்கள் இடையே நேரடியாக வாய்ஸ் மெசேஜ் மூலம் உரையாட முடியும்.  ஒருவருக்கொருவர்  நேரடிப் பிணைப்பை உருவாக்குவதே ‘கிளப் ஹவுஸி’ன் நோக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிளப்ஹவுஸ் செயலில், அரசியல், ஆன்மிகம் மட்டுமின்றி சமூக செயற்பாடுகள் என அனைத்து தரப்பினரும் குழு உரையாடல் நடத்தி வருகின்றனர். அதுபோல, சமீபத்தில், காந்தி குறித்த விவாதங்களும் அரங்கேறி உள்ளன.

அந்த கிளப் ஹவுஸ் விவாதத்தில்,  பேசிய ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் ஒருவர், “கோட்சே காந்தியை நோக்கிச் சுடவே இல்லை. கோட்சே துப்பாக்கியால் சுடும்போது காந்தி குறுக்கே வந்துவிட்டார்.” என உதார் விடுகிறார்.

‘உண்மையான வரலாற்றை அறியலாம் வாங்க’ எனும் தலைப்பிலான கிளப் ஹவுஸ் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இந்துத்துவா ஆதரவாளர் ஒருவர், “கோட்சே காந்தியை நோக்கிச் சுடவே இல்லை. கோட்சே துப்பாக்கியால் சுடும்போது காந்தி குறுக்கே வந்துவிட்டார். கோட்சேவை காந்தி திட்டமிட்டு கொன்றதாகக் கூறுவது கற்பனைக் கதை” என உதார் விடுகிறார். இந்த ஆடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாத்மா காந்தியைகோட்சே, 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் மிக அருகில் நின்று மூன்று முறை சுட்டுக் கொலை செய்ததும், காவல்துறையினரிடம் தானே சரணடைந்ததும் வரலாறு. அதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு  அம்பாலா சிறையில் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். வரலாறு இப்படி இருக்க, தற்போது இந்துத்துவா ஆதரவாளர் ஒருவர், உண்மையான வரலாறு என்று கூறி  புதிதாக ஒரு உண்மையற்ற தகவலை தெரிவிப்பதும் தேசத்துரோகமே.

நாட்டின் வரலாற்றை மாற்றுவதிலும், அதை அரசியலாக்கி திரித்து, புதிய வரலாற்றை எழுதுவதிலும் இந்திய அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும், மதவாதிகளும் ஒருவருக் கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதையே இதுபோன்ற தகவல்கள் உறுதி செய்கின்றன.