டில்லி

ஜி 20 உறுப்பு நாடுகள்ச் சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் ஏவப்பட்டது.  இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட நிலையில் ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுப் பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. மீண்டும் லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ந்தேதி செயல்படத் தொடங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

டில்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக இந்தியாவிற்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. ஜி20 மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.