சேலம்
கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது.

வருகிற 23-ந் தேதி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்குவதையொட்டி. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேக்கேஜ் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக மற்றொரு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இவை கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8 மணி மற்றும் 8.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இந்த பேக்கேஜ் சிறப்பு பஒஏருந்துகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு களித்துவிட்டு மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்வதற்கு ஒரு பயணிக்கு ரூ.300-ம், சிறுவர்களுக்கு அரை கட்டணமாக ரூ.150-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையத்திலும், www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.