சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் பிரெஞ்சு பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக  மேயர் பிரியாக தெரிவித்து உள்ளார்.

இந்திய மொழியான இந்தியை  படிக்க தமிழக மாணவர்களை தடுக்கும் திமுக அரசு, அந்நிய மொழியான பிரெஞ்சு மொழியை பள்ளிகளில்  கற்பிக்க  முயற்சிப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளின் மாணவர்களுக்கு மொழிப் படிப்புகளை நடத்துவதற்கு பிரான்சின் தூதரகத்துடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க உள்ளதாகவும்,  விளாடிவோஸ்டாக் போன்ற நகரங்களுடன் சகோதரி நகர ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சென்னை மாநகர  மேயர் ஆர். பிரியா தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே 636 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், ரூ.7 கோடியில் மேலும் 255கேமராக்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறனை உலகத் தரத்தில் மேம்படுத்தும் வகையில் பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டுள்ளது.  மாநகராட்சி பள்ளிகள் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. அதற்கான கருத்துரு மேயரிடம் சமர்ப்பித்து, மன்ற அனுமதி பெற்று செயல் படுத்தப்படும்.

முதற்கட்டமாக சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிற வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வடமாநில மொழியான இந்தி மொழியை கற்பிக்கவும், கற்கவும் திமுக அரசு மற்றும் திராவிட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை திறக்கவும் அனுமதி மறுத்து வருகின்றன.  இந்த நிலையில், அந்நிய நாட்டு மொழியான பிரெஞ்சு மொழியை கற்பிக்க திமுக அரசு முயற்சி மேற்கொள்வது  கல்வியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.