பாரிஸ்:
பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 20 லட்சத்து 73 ஆயிரத்து 394 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 30 ஆயிரத்து 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 861 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்துவருகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸ் தற்போது பிரான்சில் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் பிப்ரவரி 15-ம் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 863 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 30 ஆயிரத்து 955 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற வருபவர்களுக்கு உதவும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா குறித்த அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதில் அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.