சென்னை: சென்னையின் மையப்பகுதியில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம்  சென்னையின் மைய பகுதியில் நடைபெற உள்ளது. மெரினா கடற்கரை, மவுண்ட்ரோடு, ஓமந்தூரார் பகுதியில் இந்த கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதற்காக சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதிக்க கூடாது என கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் கார் பந்தயம் நடத்த தடை விதித்த உயர்நீதி மன்றம் பின்னர் அரசின் பதிலைக் கேட்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் அதிமுக தரப்பில், கார் பந்தயம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டு உள்ளது.  . தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்தே, ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெறுமா என்பது தெரியவரும்.