சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அத்தனை மனுக்களையும் சென்னை செசன்ஸ்  நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ளார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி. இவர் ஜாமின் கோரி கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்ததார். இந்த மனுக்கள்மீது விசாரணை நடைபெற்று ஜூலை 18ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் நீதிபதி அல்லி கூறியிருந்த  நிலையில்,   செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுக்கள் (ஜூலை 18)  நேற்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கவுதமன் ஆஜரானார். அப்போது அவர், அமலாக்கத் துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓராண்டுக்கும் மேலாக சிறையிலிருக்கும் செந்தில் பாலாஜி

அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தல்ல என்றும், ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்துதான் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருவதால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.