ரிஜோனா

சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள கூண்டின் மீது ஏறிய பெண்ணை சிறுத்தை தாக்கி உள்ளது.

அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் தலைநகர் போனிக்ஸ் அருகே ஒரு மிருகக்காட்சி சாலை உள்ளது.   இந்த மிருகக் காட்சி சாலையில் பல வன விலங்குகள் உள்ளன.   அனைத்து விலங்குகளும்  கூண்டில் அடைக்கப்பட்டு  அந்த கூண்டுகளை சுற்றி கம்பி வேலி  போடப்பட்டுள்ளது.

இந்த மிருகக் காட்சி சாலையில் அனைவரையும் கவர்ந்த ஒரு பெண் ஜாகுவார் ரக கரும் சிறுத்தை உள்ளது.    இதைக் காண ஏராளமானோர் கூடுவது வழக்கம்.   நேற்று மாலை இந்த சிறுத்தையைக் கண்ட ஒரு பெண் அதை புகைப்படம் எடுத்துள்ளார்.

அத்துடன் அந்த சிறுத்தையுடன் தாம் இருப்பது போல செல்ஃபி எடுக்க விரும்பிய அந்தப்பெண் கூண்டின் அருகே உள்ள இரும்பி வேலியில் ஏறி உள்ளார்.  அப்போது தவறி அவர் உள்ளே விழுந்துள்ளார்.   கூண்டை விட்டு வெளி வந்த சிறுத்தை அந்தப் பெண்ணை தாக்க தொடங்கி உள்ளது.

பொதுமக்கள் கூச்சலிடவே சிறுத்தை அப்பெண்ணை விட்டு விட்டு சென்று விட்டது.   மீட்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.    மரண அபாயம் உண்டாக்கும் அளவுக்கு காயம் இல்லை எனினும் அந்த பெண் மிகவும் பயந்து போய் உள்ளார்.

இது குறித்து மிருகக்காட்சி சாலை அதிகாரி, “அந்த பெண் சிறுத்தை பத்திரமாக கூண்டுக்குள் உள்ளது.  இந்த பெண்ணை அது தாக்கி இருக்க வாய்ப்பில்லை.  அவர் கூண்டின் அருகே விழுந்ததால் காயம் ஏற்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வை நேரடியாக கண்டவர்கள் அந்தப் பெண்ணை சிறுத்தை தாக்கியது உண்மைதான் என கூறுகின்றனர்.