க்னோ

பிரதமர் மோடி அரசியலில் ஆதாயம் அடைய தனது சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் இணைத்ததாக மாயவதி கூறி உள்ளார்.

மக்களவை தேர்தலில் இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 4 கட்ட வாக்கு பதிவுகள் மீதமுள்ளன. வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்துள்ளன.

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், “நாட்டு மக்கள் எனது சாதி என்னவென்று தெரியாமல் இருந்தனர். மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் தேர்தல் உரைகளைக் கேட்டு எனது சாதியை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்.

அம்பேத்கார் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கும் மாயவதி அம்பேத்காரை எதிர்ப்பவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். அவர் அம்பேத்காரிடம் இருந்து எதையும் கற்காமல் பதவி ஆசையில் கொள்கை மாறி கூட்டணி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்த போது உள்ளூர் ரவுடிகளையே அடக்க முடியாமல் இருந்த போது தீவிரவாதத்தை எவ்வாறு அடக்குவார்கள்” என பேசி உள்ளார்.

இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி, “அரசியலுக்காக மோடி தனது சாதி குறித்து தானே பேசி வருகிறார். அவர்  அரசியலில் ஆதாயம் பெறுவதற்காக தனது சாதியை பிற்படுத்தப் பட்டவர் பட்டியலில் இணைத்தவர் ஆவார். உண்மையில் அவர் முலாயம் சிங் மற்றும் அக்லேஷ் போல பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர் கிடையாது” என தெரிவித்துள்ளார்.