கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் ஏ – 320 என்ற சென்ற விமானம் தரையிறங்கும் போது, கராச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து பகுதியில் இருந்து கடும் புகை வெளியானது.
தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தினை பாகிஸ்தான் சர்வதேச விமான செய்தித் தொடர்பாளர் அப்துல் சத்தார் உறுதி செய்திருக்கிறார்.
இந்த விமானம் 90 பயணிகளுடன் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விரைவு அதிரடி படையும் சிந்துமாகாண போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.