சென்னை: நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும்  என எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது சாலைகளின்  ஓரங்களில்,  சென்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க ஏற்கனவே தடை உள்ள நிலையில், தடையை மீறீ கொடிக்கம்பங்கள் நடும்  கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியவர், நீதிமன்ற தீர்ப்புகளை அரசு மதிப்பது இல்லை  அதிருப்தி தெரிவித்தார்.

சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தும், கட்சி பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளும் அங்கே கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுவதாகவும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்  தமிழ்நாடு அரசுமீது, சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த வீடியோ காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அனுமதி அளித்து ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அரசு தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து வாதாடிய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ,  கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி அளித்து எந்த உத்தரவும் இல்லை என்றும், அவை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Suo Motu Contempt) எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

இதையடுத்து வாதாடிய  கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் பதிலளிக்கையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அதைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

முன்னதாக, தமிழகம் முழுதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில், அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. அவற்றை, கடந்த ஏப்., 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்வதற்காக, இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், (நவ.,12 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ”அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக, தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன,” என்றார்.