புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பேரவைக்கு வருகை தந்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, அவையில் ஆளுநர் உரையாற்றினார்.
புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5வது பிரிவுக் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 15வது புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 6வது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
இன்று காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. காகிதமில்லா பட்ஜெட் கூட்டமாக நடைபெற்ற நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சுமார் 55 நிமிடங்கள் உரையை வாசித்தார். இதனை தொடர்ந்து பேரவையை நாளை (10.03.2025) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.
இதனிடையே நாளை (மார்ச்.11) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. நாளை 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசுகின்றனர்.
12ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.