ஹாங்காங்:
புயல் பாதுகாப்பு மையத்தில் தீப்பற்றி எரிந்த படகுகளில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

ஹாங்காங்கின் அபர்தீன் பகுதியில் படகுகளை நிறுத்தி வைத்திருந்த புயல் பாதுகாப்பு மையத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. படகுகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 16 படகுகள் தீயில் கருகின. இதில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. படகுகளில் இருந்த 35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.