புளோரிடா: அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில்  எஃபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பு சர்ச்சைக்கு பெயர் போனவர். மிகப்பெரிய கோடீஸ்வரர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான டிரம்புக்கு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அவருக்க  சொந்தமாக புளோரிடா மாகாணத்தில் மர்-எ-லாகோ என்ற சொகுசு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில்,  எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  முன் அறிவிப்பு ஏதுவுமின்றி திடீரென அங்கு வந்த அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய தாக, டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் குற்றம் சாட்டி உள்ளர்.

அதில்,  “எனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் எப்.பி.ஐ. சோதனை நடத்தி வருகின்றனர். முன் அறிவிப்பின்றி சோதனை நடத்தும் அரசு அமைப்பு களுடன் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.  இச்சோதனை அவசியமோ அல்லது பொருத்தமானதோ அல்ல. அதிகாரிகள் என் பெட்டகத்தை உடைத்தார்கள். இது நமது தேசத்துக்கு இருண்ட காலங்கள். அமெரிக்க அதிபராக இருந்த ஒருவருக்கு இதற்கு முன்பு இது போன்று எதுவும் நடந்ததில்லை.

மூன்றாம் தர உலக நாடுகளில் மட்டுமே இத்தகைய தாக்குதல் நடத்த முடியும். துரதிருஷ்டவசமாக தற்போது அந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. இதற்கு முன்பு கண்டிராத அளவில் ஊழல் நிறைந்துள்ளது. இது மிக உயர்மட்ட அரசியல் இலக்கு நடவடிக்கை ஆகும். 2 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை அவர்கள் தீவிரமாக விரும்பவில்லை. அமெரிக்க மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது சில ரகசிய ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது. ந்த  வழக்கு விசாரணையின்போது,   தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகம், டிரம்பின் புளோரிடா கிளப்பில் இருந்து 15 பெட்டிகள் வெள்ளை மாளிகை பதிவுகள் மற்றும் பிற பொருட்களை மீட்டதாகக் கூறியது. இதைத்தொடர்ந்தே ரெய்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி, எஃபிஐ ரெய்டு குறித்து தெரியாது என்றும், இதுதொடர்பாக நீதிமன்றத்தைத்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.