புதுடெல்லி

காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல குத்துச் சண்டை வீரர்  விஜேந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். 

கடந்த மக்களவைத் தெர்தலுக்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2019 தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடைபெற உள்ள தேர்தலில், உ.பி.,யின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்தது.

இன்று, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜேந்தர் சிங் செய்தியாளர்களிடம்,

”நான் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று கூறினார்.

விஜேந்தர் சிங் அரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஜாட் சமூகத்திலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..