சுவாதி கொலை குறித்து பேஸ்புக்கில் பரபரப்பான பதிவுகளை எழுதி வரும் தமிழச்சி என்பவரால், கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர்.
“சுவாதி கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்  ஈடுபட்டிருக்கிறார்” என்று தமிழச்சி என்பவரும், திலீபன் மகேந்திரன் என்பவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதி வருகிறார்கள். இவர்கள் மீது கருப்பு முருகானந்தம் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திலீபன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று திருவாரூரில் திலீபன் மற்றும் அவரது வழக்கறிஞர் தர்மபாலா இருவரும்,  சிலரால் தாக்கப்பட்டனர். “சுவாதி கொலை வழக்கில் கருப்பு முருகானந்தத்தை தொடர்புபடுத்தி எழுதாதே” என்று சொல்லியே அக்கும்பல் தாக்குதல் நடத்தியதாக தர்மபாலா தெரிவித்தார்.

தமிழச்சி - தியாகு
தமிழச்சி – தியாகு

இந்த தாக்குதல் குறித்து தமிழச்சி  தனது பேஸ்புக் பக்கத்தில்  ஒரு பதிவை எழுதினார். தாக்கப்பட்ட திலீபனுக்கு உதவக்கோரி எழுதப்பட்ட அந்த பதிவில்,  திலீபன் குறித்த தகவல்களை அறிய தொடர்புகொள்ளும்படி ஒரு செல்பேசி எண்ணை அளித்திருந்தார். (8197092732)
ஆனால் அந்த எண்ணுக்கு உரியவர் தியாகு என்பவர் தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்.  பெரியார் பற்றாளரான அவர், திராவிடர் கழகத்தின் உறுப்பினர். , “திலீபன், தமிழச்சி இருவரையுமே எனக்கு நேரடியாக அறிமுகம் கிடையாது. போனில் கூட பேசியதில்லை. பெரியார் பற்றிய தகவல்களை எனது முகநூல் பக்கத்தில் பகிர்வேன்.   இவர்களது பதிவுகளயும் சில முறை பகிர்ந்துள்ளேன்.  மற்றபடி எந்தவித தொடர்பும் இல்லாத எனது எண்ணை ஏன் தனது பதிவில் தமிழச்சி பதிந்தார் என்று தெரியவில்லை” என்றார்.
தமிழச்சியின் குறிப்பிட்ட பதிவு
தமிழச்சியின் குறிப்பிட்ட பதிவு

மேலும் அவர், “நேற்றிலிருந்து தொடர்ந்து நூற்றுக்கு மேல் போன் வந்துவிட்டது.  பலர், திலிபன் குறித்த தகவல்களைக் கேட்கிறார்கள். நான் கர்நாடகத்தில் வசிக்கிறேன். தவிர திலீபனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்பதை ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன்.
சிலர் கொலை மிரட்டல் விடுகிறார்கள். “ திலீபன், தமிழச்சி  ரெண்டு பேரையும் கொலை செய்துவிடுவோம். அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் உன்னை முதலில் கொல்வோம்” என்று மிரட்டுகிறார்கள்.” என்றார் தியாகு.
மேலும், “தமிழச்சி என்பவரின் பேஸ்புக் பக்கத்தை பல்லாயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர், தீர விசாரித்து எழுத வேண்டாமா. தொடர்பே இல்லாத எனது எண்ணை ஏன் பதிந்தார் என்றே தெரியவில்லை. அதனால் நேற்றிலிருந்து  கொலை மிரட்டல் போன்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறினார்.
அதோடு, “தமிழச்சியின் பக்கத்தில் இது குறித்து தெரிவித்து எனது எண்ணை நீக்கும்படி சொல்லியிருக்கிறேன். அவர் அந்த செய்தியை பார்த்தாரா என்று தெரியவில்லை” என்றார் தியாகு.