நியூயார்க்

முகநூல் நிறுவன ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது.  இதுவரை சுமார் 1,93 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 7,18 லட்சத்துக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.  இதில் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  இங்கு 50 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு 1.62 லட்சத்துக்கு மேல் உயிர் இழந்துள்ளனர்.

இதையொட்டி பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதித்து வருகிறது  பல நிறுவன ஊழியர்கள் சுமார் 4 முதல் 5 மாதங்களாக வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர்.  இதில் முக நூல் நிறுவனமும் ஒன்றாகும்.  இந்த நிறுவன ஊழியர்களும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்து பணி புரிகின்றனர்.

இந்நிலையில் முகநூல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி கொரோனா தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த ஆண்டு ஜூலை முதல் வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதி அளித்துள்ளது.  மேலும் இவர்களின் அலுவலக தேவைகளுக்காக மாதம் இந்திய கணக்குப்படி ரூ.75 ஆயிரம் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

கொரோனா தாக்கம் மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி குறைந்த அளவு ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்க உத்தேசித்துள்ளதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.