டில்லி

உச்சநீதிமன்றம்  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (ஈ ஐ எ) 10 மொழிகளில் வெளியிட உத்தரவிட்டதை அரசு மதிக்காமல் 3 மொழிகளில் மட்டும் வெளியிட்டுள்ளது.

தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மத்திய மோடி அரசு பல புதிய அறிவிப்புக்களை எதிர்க்கட்சிகளைக் கேட்காமல் அறிவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.   அதில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (ஈ ஐ ஏ) அறிக்கையும் ஒன்றாகும்   இந்த புதிய அறிக்கை திருத்தத்தின்படி எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மககளிடம் ஆலோசிக்க அரசுக்கு தேவை இருகாது எனக் கூறப்பட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அறிக்கைகளை தமிழ், இந்தி மட்டுமின்றி நாட்டில் உள்ள மொழிகளில் மொத்தம் 10 மொழிகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.   நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் இது குறித்து அப்போதுதான் புரிந்துக் கொள்ள முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.   அத்துடன் இந்த அறிக்கை குறித்த கருத்துக் கேட்கும் தேதியை ஆகஸ்ட் 11 வரை நீட்டித்தது.

இந்த அறிக்கை குறித்த தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட ஒரு கேள்வியின் மூலம் கிடைத்த பதில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.  உச்சநீதிமன்றம் இந்த அரிக்கையை 10 மொழிகளில் வெளியிட வேண்டும் என அளித்த உத்தரவை மீறி மத்திய அரசு இதுவரை 3 மொழிகளில் மட்டுமே வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   அதாவது இந்த அறிக்கை இதுவரை மராத்தி, ஒரியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மொழிகளிலும் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் கருத்து அ:ளிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  அந்த மனுவில் சுற்றுச் சூழல் தாக்க அறிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.