ஜோகன்ஸ்பர்க்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி நாட்டிலும் கொரோனா பரவி இருக்கிறது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந் நாடு, ஸ்வாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டது.

கொரோனா தொற்றினால் 6,700 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு அந்நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினியும் தப்பவில்லை.

அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு, டிசம்பர் 1ம் தேதி தென் ஆப்ரிக்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரது உடல்நிலை சீராகவே இருந்துள்ளது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பிரதமர் அம்புரோஸ் லாமினி  உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மரணத்தை, துணை பிரதமர் தெம்பா மசுகு உறுதிப்படுத்தி இருக்கிறார்.