ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் மருந்துகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த அனுமதியை அடுத்து வலி நிவாரணிகள், இதய நோய் மருந்துகள், எதிர்ப்புசக்தி மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என்று தெரிகிறது.

384 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவதாக ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.