டில்லி

ச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குறித்த வழக்கில் 11 ஆம் தேதி விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தைக் கடந்த மாதம் 15-ஆம்  தேதி ரத்து செய்தது.  மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள், நன்கொடை தொகை ஆகிய விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம்  சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியைக் கேட்டுக்கொண்டது.

இந்த கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்துள்ள மனு, 11 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  அதே வேளையில் பாரத ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜனநாயக சீர்திருத்தச் சங்கம், காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன.

அவற்றில்,

”கால அவகாசம் முடிவதற்கு 2 நாட்களே இருக்கும்போது பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30-ந் தேதிவரை கால அவகாசம் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதன் மனு தீயநோக்கம் கொண்டது.  வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலும், மீறும் வகையிலும் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடத் தெளிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ 

என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி,’ஒரு இ மெயில் அனுப்பினால் 11 ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். அவர் கூறியபடி இம்மனுக்கள் 11-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.