டில்லி,

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினலுருக்கு கடந்த ஏப்ரல் 13ந்தேதி  பகிரங்கமாக சவால் விடுத்தது..

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் எனவே வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் 16 அரசியல் கட்சிகள், குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளன.

ஆனால், மின்னணு இயந்திரம் உலகிலேயே பாதுகாப்பான தேர்தல் நடைமுறை என்றும், அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் சவாலை இரண்டு கட்சிகள் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளன.

மார்க்சிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே  தேர்தல் ஆணையத்தின் சவாலை சந்திக்க தயார் என்று விண்ணப்பம் அளித்துள்ளன.

நேற்றுடன் தேர்தல் கமிஷனின் அவகாசம் முடிந்த நிலையில், தாமதமாக ராஷ்ட்ரிய லோக் தளம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம்  தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்த போதும் தேர்தல் ஆணையத்தின் சவாலை சந்திக்க முடியாமல் பின்வாங்கிவிட்டன.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மதர் போர்டை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

டில்லி சட்டமன்றத்தில் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஒருவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதை செயல்முறை சமீபத்தில் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

அதுபோல்  தம்மிடம் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தந்தால் 72 மணி நேரத்தில், வாக்குப்பதிவு முறைகேட்டை நிரூபிப்பேன் என்று கெஜ்ரிவால் அவர் கூறியிருந்தார். ஆனால், தேர்தல் கமிஷனின் சவாலை சந்திக்க ஆம்ஆத்மி கட்சி முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.