சென்னை: தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக தலைவர்  ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந் நிலையில், தமிழகத்திலுள்ள  234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. தற்போது வரை தேர்தல் ரத்து தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி நாளை தேர்தல் நடைபெறும் என்று கூறி உள்ளார்.