பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா..

ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக  கேரளாவில் இருந்து ஜோர்டான் நாட்டுக்கு  சினிமா ‘யூனிட்’ சென்றிருந்தது.

அங்குள்ள பாலைவனத்தில் ஷுட்டிங் நடந்த நிலையில், ஊரடங்கு காரணமாக சுமார்  இரண்டரை மாதங்கள் அங்கேயே படப்பிடிப்பு குழுவினர் தங்கி இருந்தனர்.

கடந்த 22 ஆம் தேதி தனி விமானத்தில் ஜோர்டானில் இருந்து இந்த குழு கொச்சி திரும்பியது.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும்  8 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் வீட்டில் 7 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அவர்களில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு என்ற இடத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பெயர்ப்பாளராகப் படக்குழுவில் சென்ற அவர் உடனடியாக மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஜோர்டானில் இருந்து திரும்பி,  இப்போது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள எஞ்சிய சினிமா குழுவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஜோர்டான் சென்றுவிட்டுத் திரும்பி, தனிமையில் இருந்த பிரித்விராஜ், தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.