சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை மனு கொடுத்துள்ளார். இந்த மனு இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுகுறித்துவிவாதிக்கக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில், எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சட்ட பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.