இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி உள்ளது. பால் லிட்டருக்கு ரூ.210 மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பால் விலை முதல் முறையாக லிட்டருக்கு ரூ.200ஐ தாண்டியது கவலையை அதிகப்படுத்துகிறது.

அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையை அடுத்து தற்போது வடக்கு எல்லையில் உள்ள பாகிஸ்தானும் திவால் நிலைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃப் அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றும் மீண்டும் பழைய நிலைக்கே பொருளாதாரத்தைக் கொண்டு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தார்.

அதேபோல் பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த 600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதிச்சிக்கலில் மாட்டி உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதுபோல, அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெறுப்வர்களுக்கு  பணிக்கொடையாக வழங்க வேண்டியசுமார் ரூ. 2,500 கோடி ரூபாயை செலுத்த இயலாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. மேலும், ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கூட வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 15 முதல் 20 நாட்கள் இடைவெளிக்குப் பிறகே சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம், தன் பங்குக்கு மேலும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. வெள்ளத்தால் அதிக செலவினங்கள் ஏற்பட்டதே நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள சூழ்நிலையில், அங்கு போட்டி அரசு அமைக்க பயங்கரவாத அமைப்புகளும் முயன்று வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால், ஸ்திரமற்ற சட்ட-ஒழுங்கு சூழ்நிலை உருவாகி திவால் நிலைக்கு ஆளாகும்சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜனவரி 2023 கடைசி வாரத்தில் உயிருள்ள பறவை கிலோ ஒன்றுக்கு ரூ.380-420கிலோ விற்கப்பட்டது. தற்போது கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.700-780க்கு விற்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.620-650. எலும்பில்லாத இறைச்சியின் விலை கிலோவுக்கு ரூ.1,000-1,100 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது, அதே காலகட்டத்தில் கிலோவுக்கு ரூ.150-200 என்ற உயர்வைக் காட்டுகிறது. எலும்பில்லாத கோழி இறைச்சி விலை தற்போது கிலோ ரூ.900-1,000 ஆகவும், எலும்புகள் கொண்ட இறைச்சி கிலோ ரூ.800-850 ஆகவும் விற்கப்படும் எலும்பில்லாத வியல் விலையை தாண்டியுள்ளது.

கராச்சி பால் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வஹீத் காடி கூறுகையில், “1,000க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் பாலை உயர்த்திய விலையில் விற்பனை செய்கிறார்கள். இவை உண்மையில் மொத்த விற்பனையாளர்கள்/ பால் பண்ணையாளர்களின் கடைகள், எங்கள் உறுப்பினர்கள் அல்ல. அவர் மேலும் கூறுகையில், “எங்கள் 4,000 சில்லறை விற்பனை உறுப்பினர்கள் லிட்டருக்கு ரூ.190 விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் வைத்துள்ளனர் என்றார். ஆனால், பால் விலை லிட்டர் ரூ.201 என விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய நிலையில்,  ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.1000க்கும், ஒருகிலோ டீத்தூள் (தேயிலை)  விலையும் ரூ.1600-ஐ எட்டியுள்ளது. அத்தியா வசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் ரம்ஜான் மாதத்திற்குள் ரூ.2500ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். நுகர்வோர் யாரும் வாங்க முன்வராததே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என தெரிகிறது.