டெல்லி: விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக, அவர்கள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, டெல்லியின் முக்கிய  எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி மக்கள் சொல்லொனா தொல்லைகளுக்கு ஆட்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் இன்று 72வது நாளாக  தொடர்கிறது. கடந்த ஜனவரி 26ந்தேதி .  குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையானதால், விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் பிப்ரவரி 6ந்தேதி சாலை மறியல் மற்றும் பாராளுமன்ற முற்றுகை நடைபெறும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

இதையடுதது, போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வர காவல்துறையினர் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து,  டெல்லியை ஒட்டிய சிங்கு, பியாவ் மணியாரி, சபோலி, ஆச்சண்டி ஆகிய எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.    டெல்லி ரெய்சினா சாலையில் வாகன போக்குவரத்து மூடப்பட்டு உள்ளது., லம்பூர், சபியாபாத், சிங்கு ஸ்கூல் மற்றும் பல்லா சுங்க சாவடி எல்லைகள் திறந்து உள்ளன.  இதனால் மாற்று வழியில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இதனால் கடுமையான வாகன  நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

மேலும்,  காசிப்பூர் எல்லை மூடப்பட்டு உள்ளது.  இதனால், தேசிய நெடுஞ்சாலை எண் 24ல் உள்ள நொய்டா உடனான இணைப்பு சாலை, தேசிய நெடுஞ்சாலை எண் 9 ஆகியவற்றின் வாகன போக்குவரத்து வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

முர்கா மண்டி மற்றும் காசிப்பூர், சாலை எண் 46, விகாஸ் மார்க், தேசிய நெடுஞ்சாலை எண் 24ல் வாகன போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று ஹரேவாலி, மங்கேஷ்பூர், திக்ரி, ஜரோடா மற்றும் தன்சா ஆகிய எல்லைகளும் மூடப்பட்டு உள்ளன.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.