சென்னை:

மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகம் உட்பட 4 மாநில டிஜிபிக்களுடன் தேர்தல் ஆணையம் இன்று ஊட்டியில் ஆலோசனை நடத்துகிறது.


மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் காவல் துறை இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஊட்டியில் நடைபெறவுள்ளது.

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான வழிவகைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவுள்ளனர்.

முந்தைய தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முறை, அதி நவீன உபகரணங்கள் பயன்பாடு, புதிய முறைகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் காவல்துறை இயக்குநர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது.