லண்டன்
கடும் பனிப் பொழிவால் பிரிட்டன் பனியில் புதைய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை கூறுகிறது.
உலகெங்கும் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. சென்னை நகர் தற்போது காலை வேளைகளில் மிகவும் குளிருடன் மலைப் பிரதேசம் போல் உள்ளது. வழக்கமாக எப்போதும் வெயில் அடிக்கும் இடத்திலேயே இந்த நிலைமை உள்ள போது பனி விழும் நாடுகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
பிரிட்டனில் தற்போது பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை 11 டிகிரிக்கும் கீழே செல்ல தொடங்கி உள்ளது. மேலும் ஆர்க்டிக் பிரதேசத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் சூறைக்காற்றை கொண்டு வரும் என பிபிசி வானிலை அறிக்கை கூறி உள்ளது.
இந்த காற்றின் வேகம் மணிக்கு சுமார் 60 மைல்களாக இருக்கும். அதாவது மணிக்கு சுமார் 96 கிமீ வேகத்தில் அடிக்கும். இது ஆர்க்டிக் பகுதியில் உருவானதால் இந்த வார இறுதியில் கடும் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பனிபெய்ய தொடங்கி காலை வேளைகளில் போர்வை போர்த்தியது போல் பனி உள்ளது.
இந்த வாரம் இது மேலும் அதிகரித்து இந்த சூறைக் காற்றுக்குப் பின் பிரிட்டன் நகரில் பனிப்பொழிவு அதிகரிப்பதால் நாடே பனியில் புதையும் அபாயம் உள்ளதாக பிபிசி வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அரசும் மக்களை குளிர் அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு அளித்துள்ளது.