திருப்பதி

திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் தங்க அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இலவச தரிசன டிக்கெட், ₹300 சிறப்புத் தரிசன டிக்கெட் உள்ளிட்டவை தினந்தோறும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர். இவர்கள் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்டர்களான அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள னிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இலவச டிக்கெட் பெற்ற பக்தர்கள் அலிபிரி சோதனைச்சாவடி வழியாக திருமலைக்கு செல்ல வேண்டும். இங்கு வழக்கமாக 6,000 முதல் 8,000 வாகனங்களில் பக்தர்கள் வருவார்கள். நேற்று 8,000 முதல் 12,000 வாகனங்களில் பக்தர்கள் திருமலைக்கு வந்தபடி உள்ளனர். ஆகவே அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் மற்றும் உடைமைகள் சோதனை செய்வதால் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருப்பதி மலையில் உள்ள 7 ஆயிரம் பக்தர்கள் தங்கும் அறைகளில் 50 சதவீதம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  ஆகவே அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் இரவு முழுவதும் காத்திருந்தனர்., பக்தர்கள் திருப்பத்திலேயே தங்கி தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் உள்ள நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்து கொள்ள வேண்டும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.