கொல்கத்தா

கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதியில் கொரோனா அச்சம் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்றி உள்ளது.   இதனால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் கூட்டமாகக் கூடுவதையும் நெருங்கிப் பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை அளித்துள்ளது.   இந்த தேசிய ஊரடங்கால் பலரால் பணி புரிய இயலாத நிலை உண்டாகி வாழ்வாதாரம்

கொல்கத்தா நகரில் உள்ள சோனாகாசி என்னும் இடம் ஆசியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்கு பகுதியாகும்.  இங்குத் தினமும் 15000 முதல் 20000 ஆண்கள் வரும் இந்த பகுதியில் இரவு பகலென வித்தியாசம் இன்றி காணப்படும்.   இங்குள்ள பெண்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி வங்கதேசம், நேபாளம், பூட்டன் போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இங்குள்ள பெண்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி உள்ளனர்.

ஆனால் மற்ற மக்கள் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பகுதிக்குச் செல்வதை அறவே தவிர்த்துள்ளனர்.  தற்போதைய தேசிய ஊரடங்கு காரணமாக இந்தப் பெண்கள் வீட்டு வாசலில் நின்று அழைப்பு விடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்தப் பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஸ்மராஜித் ஜனா, “நாங்கள் தர்பார் மகிளா கமிட்டி என்னும் அமைப்பை நடத்தி வருகிறோம்.  அதில் சோனாகாசியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களும் உறுப்பினராக உள்ளனர்.   தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவர்களது வாழ்வாதாரம் கடும் பாதிப்பு அடைந்து ஒரு சிலர் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

இவர்களது பசியைப் போக்க அரசு முன்வர வேண்டும்.  எங்கள் அமைப்பில் உள்ள நிதியைக் கொண்டு இந்த சோனாகாசி  பகுதியில் உள்ள பெண்களுக்கு உணவளிக்க முடியாது.   எனவே அரசின் உதவியை நாடி உள்ளோம்.  மேலும் இங்குள்ள சுமார் 10000 பெண்கள் வருமானம் இன்றி தவிப்பதால் அவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் இந்த மாத வாடகை வசூலிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.