சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள போதை பொருள் கடத்தல் மன்னனான,  திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்  கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய,  ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும்  அவரது சகோதரர் முகமது சலீம் உள்பட பலர்  தலைமறைவாகினர். இதனிடையே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்லும் வகையில், ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்தபோது போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் வழங்கி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 9 கைதாகியுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம் மற்றும் மைதீன் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை வலைவீசி தேடும் காவல்துறையினர், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்  மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் மீதான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதர்கள் இருவருடனும் யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது குறித்தும், அவர்களின் செல்போன் எண்களைக் கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.