வாஷிங்டன்:
கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்து வந்த இப்தார் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை டிரம்ப் அரசு இந்த ஆண்டு நடத்தவில்லை.
ரமலான் மாதத்தில் முஸ்லிம் நாள் முழுவதும் நோன்பு இருந்து மாலை சூர்ய மறைவுக்கு பின் தொழுகையுடன் இப்தார் விருந்து நடத்தப்பட்டு நோன்பு திறக்கப்படும். வெள்ளை மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக அதிகாரிகள் ஒரு மாத காலம் பணியாற்றுவார்கள்.
கிளின்டன், புஷ், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி வழக்கமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு இதில் இருந்து வேறுபட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து ரமலான் வாழ்த்து செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது.
அதில்,‘‘ அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் உலகில் உள்ள இதர முஸ்லிம்களோடு இணைந்து நம்பிக்கை மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் நோக்கத்தோடு செயல்படுவார்கள்.
இதன் நினைவாக தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி அருகில் இருப்பவர்களுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உதவி செய்வார்கள்.
இந்த விடுமுறை காலத்தின் போது கருணை, இரக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறோம். அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் மற்றும் உலகின் இதர பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின் இந்த மதிப்புக்கு நாங்கள் மரியாதை செய்கிறோம். ரம்ஜான் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
1809ம் ஆண்டு அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன் முதல் முதலாக துனிசியா தூததர் சிதி சோலிமன் மெல்லிமெல்லிக்கு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். அப்போது முதல் அடுத்து வந்த அதிபர்கள் சார்பில் அரசு இப்தார் விருந்தளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.