சென்னை: பால் பாக்கெட் விவகாரத்தில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ், அண்ணாமலை தனியார் பால் நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுவிட்டு குற்றம் சொல்கிறார் என விமர்சித்தார். இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும், இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், “மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டிருந்த பதிவில், “அமைச்சர் மனோ தங்கராஜ், இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று கூறியிருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது.
இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும், பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!” என்று கூறியுள்ளார்.