நெட்டிசன்:

கரடிகுளம் ஜெயபாரதி ப்ரியா அவர்கள், “ஆண்டாளம்மாக்கள்.” என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு:

69 வயதில் ஆண்டாளம்மா நுறு நாள் வேலைத்திட்டத்தில் ரோட்டோரம் குழி வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓடைக்கரை ஆண்டாளம்மா முதியோர் பென்ஷன் கேட்டு பத்து வருடங்களாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் மாவட்டஆட்சியர் அலுவலகத்துக்கும் அலைகிறார்கள்.

நிறைய வயதான ஆண்டாளம்மாள்கள் தீப்பெட்டி ஆபீஸ்களிலும் பட்டாசுக்கம்பெனிகளிலும் பீடிக் கம்பெனிகளிலும் மூச்சுமுட்டி வேகிறார்கள்.

பல ஆண்டாளம்மாக்கள் பத்துப்பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்துகிறார்கள்…

முதுமையும் நோயும் அழுத்த கூனிக்குறுகியபடி அரசுமருத்துவமனை வராண்டாக்களில்கிழிந்த பாய் களாக பல நூறு ஆண்டாளம்மாக்கள் சுருண்டு கிடக்கிறார்கள்

பிள்ளைகளால் துரத்தப்பட்ட பல ஆண்டாளம்மாக்கள் முதியோர் இல்லங்களில் முடங்கிக்கிடக்கிறார்கள்.

ஆண்டாள் கோவில்கள் வாசல்களிலேயே நிறைய ஆண்டாள்கள் பசியோடு கையேந்துகிறார்கள்.

இவர்களில் எவருக்கேனும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவமானப்படுத்தப்பட்டது தெரியுமோ ?