லண்டன்:

ராம்வேர் வைரஸால் உலக நாடுகளை மிரட்டி வரும் வான்னக்ரை குழு  இதுவரை எவ்வளவு சம்பாதித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வான்னக்ரை என்ற குழு சமீபத்தில் ரான்சம்வேர் வைரஸ் ஒன்றை இணையம் வழியாக உலகம் முழுதும் பரவவிட்டது. இ-மெயில் மூலம் வரும் இந்த வைரஸ் நமது கணினியில் திறக்கப்பட்டால் அந்த வைரஸ் நமது கணினியில் பரவி அதில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடும். அவ்வாறு என்கிரிப்ட் செய்யப்பட்டால் நமது கணினியை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்
இந்த வைரஸை பரப்பும் வான்னக்ரை குழு தங்களுக்கு குறிப்பிட்ட பணத்தை பிட் காயின் மூலம் அனுப்பினால் மட்டுமே கணினி மீண்டும் செயல் படும் என மிரட்டி வருகிறது. (பிட் காயின் முறையில் யாருக்கு பணம் செலுத்துகிறோம் என்பதை அறிய முடியாது)

இந்த வைரஸை பரப்புபவர்கள் யார் என்பது தெரியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வல்லூநர்கள் பல வழிகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதன் மூலம் இதுவரை வான்னக்ரை குழு எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த எல்லிப்டிக் என்ற மென்பொருள் நிறுவனம் வான்னாக்ரை குழுவினர் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளும் முகவரியை கண்டறிந்துள்ளது. குறிப்பிட்ட அந்த முகவரியில் உள்ள கணக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) இருப்பதாக தெரிய வருகிறது.

ஆனாலும்  வான்னாக்ரை குழுவினர் தங்களுடைய பிட்காயின் கணக்கில் இருந்து பெரும் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.