சென்னை: திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24ந்தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும், 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறையும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களப்பணியாற்றி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக பல்வேறு பெயரில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி, ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 14ந்தேதி முதல்கட்டமாக வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அடுத்தகட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
இதற்கான முன்னேற்பாடுகளை இளைஞரணி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டிலும் பங்கேற்க 1.5 லட்சம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு மண்டலங்களுக்கான மாநாடுகளை ஒரேகட்டமாக சேர்த்து பிப்ரவரியில் நடத்துவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
[youtube-feed feed=1]