சென்னை: வஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவர் அனுமதி கொடுத்த உடன்  இந்த மசோதா நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளதைக் கண்டித்து பேசினார். அப்போது, இந்த மசோதாவை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறினார்.

முன்னதாக,   வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் தலைமையில் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதாவது,   கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத நல்லிணக்கத் திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளா லும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவையில்,  வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பூர்வமாக எதிர்த்து வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.